பாதாள சாக்கடை வசதி இல்லாத மீஞ்சூர் பொதுக்குளத்தில் கழிவு நீர் பாயும் ஆபத்து

மீஞ்சூர்: மீஞ்சூரில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத நிலையில், மழைநீர் வடிகால்வாய் கட்டப்படுவதால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, குப்பாரெட்டி குடியிருப்பு பகுதியில் 1 ஏக்கர் பரப்பில் பொதுக்குளம் அமைந்துள்ளது.

குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், முள்செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி பொதுக்குளத்தில் இணைக்கும் வகையில் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் பாதாளச்சாக்கடை திட்டம் அப்பகுதியில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இதனால், தற்போது கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில், வீடுகளில் இருந்து விதிமீறி கழிவு நீர் இணைப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால், மழை நீர் வடிகால்வாயில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்

பொது குளத்தில் கலக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால், இதற்கு அப்பகுதிமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

மழை நீர் வடிகால்வாயில் கழிவு நீர் கலக்காதபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement