நமச்சிவாயம் டில்லியில் முகாம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பா.ஜ.,வினர் டில்லியில் முகாமிட்டுள்ளதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி, 18 தொகுதிகளை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடிகிருஷ்ணாராவ் பதவியேற்றனர். கடந்த 18 ம் தேதி தற்காலிக சபாநாயகர் பதவியேற்ற நிலையில், நேற்று முன்தினம் காலை எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். அடுத்த சில மணி நேரங்களில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் குறித்த தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பா.ஜ., வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மதியம் அவசரமாக புறப்பட்டு டில்லி சென்றார். அதற்கு முன்பாகவே எம்.எல்.ஏ.,க்களான பா.ஜ., ராஜசேகர், ல.ஜ.க., ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரமும் டில்லியில் முகாமிட்டுள்ள தகவல் வெளியனாது.

இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தேர்தல் வெற்றிபெற்று அமைச்சராக பதவியேற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டில்லி வந்துள்ளேன். இன்று (நேற்று ) இரவு தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார். நாளை (இன்று ) தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரத்தில் விசாரித்தபோது, அமைச்சரவை விரிவாக்கம், இலாக ஒதுக்கீட்டை முடிவு செய்வதற்காக அமைச்சர் நமச்சிவாயமும், ராஜசேகர், ஜோஸ் சார்லஸ் ஆகியோர் அமைச்சர் பதவி கேட்டும், நியமன எம்.எல்.ஏ., பதவியை பெற கல்யாணசுந்தரம் டில்லியில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ., அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாமிட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement