மானிய விலையில் இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

உடுமலை: மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு தேவையான விதைகள்,  உரங்கள் மானிய விலையில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படுகிறது. அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: மடத்துக்குளம் வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனர்.

இம்மழையினை பயன்படுத்தி, குறுகிய கால பயறு வகை பயிர்களான, உளுந்து, தட்டை பயறு, கொள்ளு ஆகிய பயிர்களை விதைக்கலாம்.

விவசாயிகளுக்கு தேவையான இந்த பயறு வகை விதைகள், மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் உள்ள விற்பனை கிடங்குகளில் இருப்பு உள்ளது.

மேலும், மடத்துக்குளம் வட்டாரத்தில் நிலைப்பயிராக உள்ள தென்னை மரங்களில், குரும்பை கொட்டுதல், ஒல்லிக்காய் வருவதை தவிர்க்க, தென்னை நுண்ணுாட்டம் இடுவது மிக முக்கியமானதாகும்.

விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்டம், 4 டன் இருப்பு உள்ளது. மேலும், பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களான, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, அசோபாஸ் மற்றும் சிங்க் பாக்டீரியா ஆகிய உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது.

மேலும், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, சோளம் கோ–32 ஆகிய விதைகளும் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் உள்ள இடு பொருட்களை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement