சான்றிதழ் பெறுவதற்கு மாணவர்கள் தவிப்பு

கமுதி: இ–சேவை மையங்களில் சான்றிதழ் பதிவு செய்து பெறுவதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பள்ளி, கல்லுாரி திறக்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் சான்றிதழ் பெறுவதற்கு தயாராகி வருகின்றனர். முதல் தலைமுறை பட்டதாரி, வருமானம், இருப்பிடம் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெறுவதற்கு இ–சேவை மையங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு இ–சேவை மையங்களில் பதிவு செய்தால் மூன்று நாட்களில் சான்றிதழ் பெற்று வந்தனர். தற்போது பதிவு செய்தால் ஒரு வாரத்திற்கும் அதிகமாவதால் மாணவர்கள் சான்றிதழ் பெற சிரமப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்வதற்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு பதிவு செய்து வரும் நிலையில் சான்றிதழ் பெற தாமதம் ஆவதால் சிரமமாக உள்ளதாக மாணவர்கள் கூறினர்.

எனவே கமுதி, முதுகுளத்துார் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இ–சேவை மையம் சர்வர் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதால் சான்றிதழ் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் மாலை நேரத்தில் சான்றிதழ் பதிவு செய்து வருவதாக பணியாளர்கள் கூறினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

–––

Advertisement