கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி

6

கோவை: மீண்டும் அமைச்சராகி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என நினைத்த முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கனவு தவிடுபொடியாகி உள்ளது. த.வெ.க., நிர்வாகிகளையே கோவைக்கு 2 அமைச்சர்களாக நியமித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் விஜய்.


தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது வழக்கம். இம்மூன்று மாவட்டங்களில் 21 தொகுதிகள் உள்ளன.


கோவையில் 6, திருப்பூரில் 4 என, 10 தொகுதிகளில் த.வெ.க., வென்றது. நீலகிரியில் மட்டும் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை.


தி.மு.க., கோவையில் 3, திருப்பூரில் 2, நீலகிரியில் 2 என ஏழு தொகுதிகளில் வென்றது.

அ.தி.மு.க., கோவையில் 1, திருப்பூரில் 2 என, 3 தொகுதிகளில் வென்றுள்ளது. பா.ஜ., நீலகிரியில் ஒரு தொகுதியில் வென்றது.

கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மட்டுமே வெற்றி பெற்றார். த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த வேலுமணி, அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். அவரது எண்ணம் பலிக்கவில்லை.

செந்தில் பாலாஜிக்கு பதிலடி



அ.தி.மு.க., - இ.பி.எஸ்., ஆதரவு நிர்வாகிகள் கூறியதாவது:
த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு பலனாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற ஆசையில் வேலுமணி இருந்தார். மீண்டும் அமைச்சராகி, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எண்ணியிருந்தார்.


வேலுமணி மீது தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் த.வெ.க., கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை போயிருக்கும். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை முதல்வர் விஜய் உணர்ந்திருக்கிறார்.

அதனால், அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்காக வேலுமணிக்கு முக்கியத்துவம் தராமல், த.வெ.க., நிர்வாகிகளான எம்.எல்.ஏ.,க்கள் சம்பத்குமார், விக்னேஷ் ஆகிய இருவருக்கு அமைச்சர் அமைச்சர் பதவி கொடுத்து, அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார் விஜய்.
அதேநேரம், தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர். பாட்டிலுக்கு 10 ரூபாய் என தேர்தல் பரப்புரையில் விஜய் கிண்டலடித்து பாடினார். இதன் காரணமாகவே, கோவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., விக்னேஷ்க்கு அத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை நிறுத்துவது, 11 - 11 இயங்கும் மனமகிழ் மன்றங்களை மூட வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் புதிய அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement