64 ஆண்டுகளுக்கு பின்னர் குமரிக்கு காங்., அமைச்சர்; கழகங்களிடம் கைகட்டிய நிலை மாறியதாக மகிழ்ச்சி

16

நமது நிருபர்



கடந்த, 64 ஆண்டுகளுக்கு பின், குமரி மாவட்ட காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. லுார்தம்மாள் சைமனுக்கு பின், ராஜேஷ்குமார் காங்கிரஸ் சார்பில் அமைச்சரானதை, குமரி மாவட்ட காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. கன்னியாகுமரி குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் 1,000 முதல் 3,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் த.வெ.க., தோல்வியை தழுவியது. ஆனால், ஆறு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தை த.வெ.க., பெற்று திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில், தேர்தலுக்கு பின், த.வெ.க., உடன் காங்., கூட்டணி அமைத்ததால், அக்கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டதில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த, 1957 முதல் 62 வரையிலான காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் குளச்சல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற லுார்தம்மாள் சைமன், உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, 64 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் சார்பில் ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளதை, குமரி மாவட்ட காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.

ராஜேஷ்குமாரின் கிள்ளியூர் தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு எந்த திராவிட கட்சியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. கடந்த இரண்டு தேர்தலிலும் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜேஷ் குமார், இம்முறை மிக சிரமப்பட்டு தான் வெற்றியை எட்டிப் பிடித்தார். அதாவது, த.வெ.க., வேட்பாளர் சபினை விட, 1,311 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அமைச்சர் பிரதிநிதித்துவம் கட்சியை மேலும் பலப்படுத்தும் என நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுவரை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கைகட்டி நின்ற நிலை மாறிவிட்டதாகவும், இது ஒரு நல்ல மாற்றம் என்றும் காங்கிரசார் கூறுகின்றனர்.

கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூரில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த த.வெ.க., வேட்பாளர்களும் அங்குள்ள நிர்வாகிகளும் சற்று ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். எனினும், முதல் தேர்தலிலேயே ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க முடிந்ததாக இவர்கள் கூறுகின்றனர்.

போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் த.வெ.க., தோல்வி அடைந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் கிடைத்ததில், மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement