ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்

6

சென்னை: 'ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்' என, தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் கிண்டல் செய்துள்ளார்.

முதல்வர் விஜயின், த.வெ.க., அரசில் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்ததை மிகக்கடுமையாக தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா விமர்சித்த நிலையில், இது குறித்து, சேகர் வெளியிட்ட அறிக்கை:

ஏணியும், சிறுத்தையும் விசில் சத்தத்தில் கரைந்து போனதற்கு, காழ்ப்புணர்வோடு காம லீலை வசனங்களை எழுதி, 'எக்ஸ்' தளத்தில் புலம்பி இருக்கிறார், ஈ.வெ.ராமசாமியின் பேரன் ராஜா. ஒரு விசில் சத்தத்திற்கே, தாங்காமல் கரைந்தது ஒரு சித்தாந்தமா?

தமிழக மக்கள் தொகையில், இரண்டு சதவீதம் கூட இல்லாத பிராமணர்களின் ஆதிக்கமாம். 'பிராமணர்கள் ஒழிக, தமிழன் ஒழிக, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி,' என சொன்னவரின் தாய் மொழி தெலுங்கு. தினசரி மாற்றி பேசுவதில் மாற்றில்லாதவர்.

தி.மு.க.,வையும், அண்ணாதுரையையும் ஈ.வெ.ராமசாமி துாற்றிய துாற்றுகள், இன்னும் காற்றில் இருந்து கரையவில்லை. மாற்றி மாற்றி பேசும், மன நோயாளியின் வழித்தோன்றல்கள், ஈ.வெ.ராமசாமியின் சித்தாந்தத்தை காப்பாற்ற, கால தேச வர்த்தமானுக்கு காத்திருக்கின்றனராம்.

கடந்த 65 ஆண்டுகளாக, தமிழனை புதை குழியில் தள்ளியது போதாதாம். அவ்வளவு காலம், அந்த சித்தாந்தத்தை காப்பாற்ற போதவில்லையாம். ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல், ஒப்பாரிகளின் ஒய்யார கூடாரம். பயந்தாங்கொள்ளிகளின் விரிசல் மாளிகை. தி.மு.க., எனும் தீய்ந்து போன திருக்குவளை தீயசக்தி. பாவம் ராஜா, புலம்புவதில், இன்னொரு ஆ.எஸ்.பாரதி ஆகி விட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement