விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி

3

சென்னை: 'ஆதரவு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, பொதுக்கூட்டம் நடத்த, த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.

பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைக்க தடுமாறிய த.வெ.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., - கம்யூ., கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு கொடுத்தன. இதனால், த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து, விஜய் முதல்வரானார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் இணைந்து, பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டம், ஆதரவு கட்சிகளை, த.வெ.க., கூட்டணி கட்சிகளாக அறிவிக்கும் விதமாக ஏற்பாடு நடக்கிறது.

த.வெ.க.,வின் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும், இந்த பொதுக்கூட்டம், வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, தனது ஆஸ்தான ஜோதிடரிடம், நல்ல நாளை கணித்து கொடுக்கும்படி, முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கோவை சிறுமி பாலியல் வழக்கு, மின் தடை பிரச்னை உள்ளிட்டவையால், நடத்த முடியவில்லை.

இந்த பொதுக்கூட்டத்தில், த.வெ.க., கூட்டணிக்கு, 'மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி' என பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement