பிளஸ் 2 தேர்வில் 547 மதிப்பெண்: மாற்றுத்திறனாளி மாணவி அசத்தல்! மேற்படிப்புக்கு அரசு உதவ கோரிக்கை

சென்னை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, பார்வை மாற்றுத்திறனாளி மாணவி நந்தினி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 547 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். மேற்படிப்புக்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், வி.புதுாரை சேர்ந்தவர், பார்வை மாற்றுத்திறனாளி மாணவி நந்தினி, 21. இவர், திருச்சி அரசு பார்வையற்றோருக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

வறுமை, உடல் நலப் பிரச்னை, பார்வை குறைபாடு என, அனைத்தையும் கடந்து, நடந்து முடிந்த பொதுத் தேர்வில், மாணவி நந்தினி 600க்கு 547 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். தமிழில் 97, வரலாற்றில் 100, அரசியல் அறிவியலில் 97 மதிப்பெண் என, 600க்கு 547 மதிப்பெண் பெற்று, பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

கலெக்டராக வேண்டும் என்பது தனது கனவு எனக் கூறும் மாணவி நந்தினி, உயர் கல்விக்காக சென்னை உள்ளிட்ட பல கல்லுாரிகளில் விண்ணப்பித்துள்ளார். இலக்கை அடைய, தமிழக அரசு உதவ வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, மாணவி நந்தினி கூறியதாவது: என் அம்மா இறந்துவிட்டார். அப்பாவும் மாற்றுத்திறனாளி என்பதால், சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறேன். உயர் கல்விக்காக சென்னை செல்ல முடிவு செய்துள்ளேன்.

அதற்கான கல்லுாரி கட்டணம், தங்கும் செலவு, யு.பி.எஸ்.சி., பயிற்சி மற்றும் தேர்வு எழுதுவதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.

மேலும், என்னுடன் திருச்சியில் படித்து, பொதுத் தேர்வில் 509, 507 மதிப்பெண்கள் பெற்ற மாணவியர் திவ்யா மற்றும் தேவதர்ஷினியின் உயர் கல்விக்கும் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement