அடிக்கடி எரிந்து சேதமாகும் சவுக்கு பயிர் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சவுக்கு பயிர்களில் மின் கம்பிகள் உரசுவதாலும், மர்ம நபர்கள் தீ வைப்பதாலும் எரிந்து சேதமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நெல், கரும்புக்கு அடுத்த நிலையில், பரவலாக சவுக்கு பயிரிடப்படுகிறது. 4 ஆண்டுகள் என்ற நீண்டகால பயிர் என்றாலும், விவசாய நிலத்தை விற்காமல், ஓரளவுக்கு வருவாய் ஈட்டும் பயிராக இருப்பதால் பலர் சவுக்கு பயிரிடுகின்றனர்.

ஆண்டு தோறும் புயல், வெள்ளம் போன்ற சீற்றங்களில் சவுக்கு பயிர்களும் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆனால், பிற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் அரசு, சவுக்கு பயிருக்கு இழப்பீடு வழங்குவதில்லை. வேளாண் பயிராக இல்லாமல் வனப்பயிராகவே தொடர்வதால், அரசு தரப்பில் அதன் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மைக் காலமாக சவுக்கு பயிர்கள் தீயில் பாதித்து பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபு உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், 40 ஆயிரம் ஏக்கர் அளவில் சவுக்கு பயிரிடப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 1,500 ஏக்கர் அளவில் சவுக்கு பயிர்கள் தொடர்ந்து எரிந்து சேதமாகியுள்ளது.

மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாலும், ஏரியில் விழல்களுக்கு விஷமிகள் தீ வைக்கும்போதும், சில அடையாளம் தெரியாதவர்கள் சவுக்கு தோப்பிற்கு தீ வைப்பதாலும், சவுக்கு தோட்டங்களில் தீப்பிடித்து பாதிப்பது தொடர்கிறது.

குறிப்பாக திண்டிவனம் அருகே பாங்கொளத்துார், பசார், அண்டப்பட்டு, ஏப்பாக்கம், பாதிரி, மரக்காணம் அருகே வடநெ ற்குணம், கட்டளை, மயிலம் அடுத்த பெரும்பாக்கம், பரிக்கல்பட்டு, வானுார் அடுத்த உலகாபுரம், கீழ்புதுார், புதுக்குப்பம், புதுநகர், காரட்டை போன்ற கிராமங்களில் கடந்த இரு மாதங்களில் சவுக்கு பயிர் எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு பயிரிட ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பழைய ரக சவுக்கு, நவீன விரைவு ரக சவுக்கு பயிர்களும், எதிர்பாராத விதமாக காற்று வீசும்போது, சவுக்கு பயிர்களின் வழியாக தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிகிறது.

இதில், சவுக்கு மரங்கள் கருகி வீணாகிறது. ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினால் தான், பயிரை அகற்றி மீண்டும் பயிரிட முடியும்.

சவுக்கு பயிர் வனத்துறை பயிராகவே உள்ளதால், எவ்வித நிவாரணமும், அரசு இழப்பீடும் பெற முடியாத நிலை உள்ளது. வேளாண், தோட்டக்கலைத்துறை பயிராக மாற்றி அரசு நடவடிக்கை எடுத்தால் தான் நிவாரணமும், மானியம், வங்கி கடன் போன்ற உதவிகளை விவசாயிகள் பெறமுடியும். இது குறித்து, அரசுக்கும், விழுப்புரம் கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement