'பாலியல் குற்றவாளிகளின் மரண தண்டனையை மக்கள் முன் நிறைவேற்றலாம்'

துாத்துக்குடி: ''மரண தண்டனையை மக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகர் சரத் குமார் தெரிவித்தார்.

துாத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

போதையில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு, மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சம்பவம் தொடர்பாக, நீதிமன்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் வாயிலாக, விரைவாக வழக்குகளை முடித்து தண்டனை வழங்க வேண்டும்.

பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில் மரண தண்டனை தான் வழங்க வேண்டும் என்பதே என் கருத்து. அதுவும், மக்கள் முன்னிலையில் குற்றவாளியை துாக்கிலிட்டால் சரியாக இருக்கும். பாலியல் வழக்குகளில் குற்றவாளி களின் வயது வித்தியாசம் பார்க்காமல், உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவாக நடத்த வேண்டும். அப்படி செய்தால் தான் குற்றங்கள் குறையும்.

புதிய திரைப்படங்களை, முதல் ஒரு வாரத்துக்கு, ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement