சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை  

திண்டிவனம்: ‘தமிழகத்திற்கு நிரந்தர டி.ஜி.பி.,யை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்’ என பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: 

தமிழ்நாட்டில் சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.,) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி., நியமனத்திற்கான 3 பேரை இறுதி செய்துள்ளது.  

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ்குமார் மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகிய 3 பேரும் அனுபவமிக்க உயர் அதிகாரிகள். இந்த பட்டியலில் இருந்து மாநில அரசு உடனடியாக ஒரு தகுதியான அதிகாரியை தேர்வு செய்து தமிழ்நாட்டின் நிரந்தர டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும். 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 3 மொழிகள் கட்டாயம் என்றும், அதில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ.,வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரு மொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் மூலம் தமிழக மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் தனித்துவமான மொழிக் கொள்கையை புறக்கணித்து மூன்றாவது மொழியை திணிக்க முயற்சிப்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். எனவே, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழகத்தின் இருமொழி கொள்கையை மதித்து, மாநில மக்களின் உணர்வுகளையும் கல்வி உரிமையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement