சுய விருப்பத்துடன் கையெழுத்திட்டு தரும் ராஜினாமா கடிதத்தை ஏற்பதே என் கடமை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

2

சென்னை: ''சுய விருப்பத்துடன் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டு தரும் ராஜினாமா கடிதங்களை ஏற்பது தான் என் கடமை,'' என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி சந்தித்து, மூன்று பக்க மனு அளித்துள்ளார்.

அது தொடர்பாக சட்டசபை விதிகளின்படியும், சட்ட முறைகளின்படியும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து அறிவிப்பேன்.

எம்.எல்.ஏ.,க்கள் முடிவில் நான் குறுக்கிட முடியாது. அவர்கள் மனு கொடுத்த பின், அது தொடர்பாக நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்.

சபை விதிகளுக்கு உட்பட்டு நான் நடந்து வருகிறேன். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். அது அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

என் முடிவு தான் இறுதியானது. சபை விதிகளை மீறி செயல்படுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. என் கடமையை நிறைவாக செய்து வருகிறேன். யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

சபாநாயகர் அலுவலகம், சட்டசபை அதற்கான இடமும் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் சுய விருப்பத்துடன் கையெழுத்திட்டு வழங்கும் கடிதத்தை ஏற்றுக்கொள்வது என் கடமை. எனக்கு பழி வாங்கும் உணர்ச்சியோ, யார் மீதும் கோபமோ, விருப்பு, வெறுப்போ கிடையாது.

அரசிதழில் வெளியிடப்பட்ட பின், தேர்தல் கமிஷன் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Advertisement