திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் தங்க காகம் வாகனத்தில் சுவாமி வீதியுலா

காரைக்கால்: திருநள்ளாறு பிரமோற்சவ விழாவில் தங்க காகம் வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா நடந்தது.

காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது.

கடந்த 20ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, 21ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 25ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக 27ம் தேதி ஐந்து தேர்களின் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு சனீஸ்வர பகவான் தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளினார்.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவான் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவில் தருமபுரம் ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதர் தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், ராஜாசுவாமிநாத சிவாச்சார்யார் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement