ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி

16

நமது சிறப்பு நிருபர்



ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் (குறிப்பாக ₹500, ₹200, ₹100 போன்ற புதிய நோட்டுகள்) பாதுகாப்பு மற்றும் கள்ள நோட்டுத் தடுப்புக்காக இந்திய ரிசர்வ் வங்கி பல மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. அதே வேளையில், பண நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கில், வார்னிஷ் பயன்படுத்துவது குறித்தும் வங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மார்ச் 2026ன் இறுதியில், புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 11.9% உயர்ந்து ரூ. 41.2 லட்சம் கோடியாகவும், அவற்றின் எண்ணிக்கை 10.5% உயர்ந்து 17.1 லட்சம் கோடியாகவும் இருந்தது. இது ரொக்கப் பணத்திற்கான தேவை தொடர்ந்து நீடித்து வருவதையே பிரதிபலிக்கிறது. நாணயங்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது; அவற்றின் மதிப்பு 11.4% உயர்ந்து ரூ. 40,814 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக, 2025 நிதியாண்டில் 11.7% ஆக இருந்த 'பணப்புழக்கம்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 12.1% ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பு படி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மிக வேகமாக வளர்ந்து வந்தபோதிலும், தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் ரொக்கப் பணத்தையே அதிகம் விரும்புவதே இந்த அதிகரிப்பிற்குக் காரணம் என தெரிகிறது.


500 ரூபாய் நோட்டுகள்




ரூ. 2,000 பண நோட்டுகள் ஏறக்குறைய முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து ரூ. 500 நோட்டுகள் தற்போது ரொக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. மொத்தப் பண நோட்டுகளின் எண்ணிக்கையில் 41.2 சதவீதத்தையும், மொத்த மதிப்பில் 85.5 சதவீதத்தையும் ரூ. 500 நோட்டுகள் கொண்டுள்ளன.

கண்டறியப்பட்ட மொத்தக் கள்ளநோட்டுகளில் 97.6 சதவீதத்தை வங்கிகளே அடையாளம் கண்டுள்ளன. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ரூபாய் நோட்டுகளை 2026ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரூபாய் நோட்டுகளின் சுகாதாரம் மற்றும் ஆயுட்காலத்தை மேம்படுத்த, அச்சிடும் தாளை நுண்ணுயிர் கொல்லி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டதாக மாற்றவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement