கள்ளக்குறிச்சி முருகன் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத செந்தில் ஆண்டவருக்கு வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8:30 மணிக்கு சடாட்ச ஹோமம், புண்ணியாகவஜனம், கலசபூஜை, மஹாபூர்ணாஹூதி நடந்தது.

தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வள்ளி தெய்வாணை சமேத செந்தில் ஆண்டவர் முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்று 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு முருகனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளை துரைசாமி குருக்கள் குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல், இந்திலி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

Advertisement