‘தட்கல்’ மின் திட்டத்தில் மின் இணைப்பு எப்போது?  விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: ‘தட்கல்’ முறையில், லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு, விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. 



‘தட்கல்’ திட்டம் வாயிலாக, விவசாயிகள், தொகையை செலுத்தி, மின் இணைப்பு பெறும்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2.50 லட்சம் ரூபாய், மூன்று லட்சம் ரூபாய் வீதம் செலுத்தி விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இலக்கு நிர்ணயிக்காமல், ‘தட்கல்’ திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும், மின் இணைப்பு வழங்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



குறிப்பாக, தாராபுரம் கோட்டத்தில் மட்டும், 38 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள், பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசு அறிவித்திருந்தபடி, 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும், மின்இணைப்பு வழங்கப்பட்டது. மீதியுள்ளவர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இலக்கு நிர்ணயம் செய்து, காலத்தை வீணடிக்காமல், பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



இது குறித்து, தாராபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டதும், ‘தட்கல்’ முறையில் மின் இணைப்பு பெற, ஒரு லட்சம், 2.50 லட்சம் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளோம். முதலில், 10 ஆயிரம் பேருக்கு வழங்கிவிட்டனர். அடுத்தவர்களுக்கு எப்போது மின் இணைப்பு கிடைக்குமென கேட்டால், போதிய தளவாடங்கள் இருப்பு இல்லை. வந்த பின், வழங்கப்படுமென, கூறுகின்றனர். பணம் செலுத்தி காத்திருக்கும், 38 ஆயிரம் விவசாயிகளுக்கும், மின் இணைப்பு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement