கருணையுள்ள 'கரகாட்டக்காரன்'

தமிழக நாட்டுப்புற கலைகளுள் முதன்மையானது கரகாட்டம். கோயில் விசேஷம், பொங்கல் திருநாள், கிராமிய விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் கலைகளில் ஒன்று. காலம் மாறிவிட்ட சூழலில் இதுபோன்ற கலைகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இக்கலையை உள்நாடு, வெளிநாடுகள் சென்று உயிர்ப்புடன் வைத்திருந்த கலைஞர் ஒருவர், இன்று வறுமையின் பிடியில் சிக்கிய போதிலும் வகையற்ற சிறுவர்களை வாரியணைத்து உணவு, உடை வழங்கி வாழ்வளிக்கிறார்.


மதுரை மதிச்சியம் லுார்துசாமி, பிறந்தது காரைக்கால் என்றாலும் சிறு வயதிலேயே மதுரைக்கு வந்தார். மதிச்சியத்தில் இருந்த கரகாட்டக் குழுவில் தஞ்சமடைந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் உணவும், இருப்பிடமும் கிடைத்தது. அதன்வழி வாழ்க்கை பயணம் தொடர்ந்தது. மூத்த கலைஞர்கள் மூலம் இக்கலையை உள்வாங்கி சிறந்த கலைஞராக உருவெடுத்தார்.Latest Tamil News


இதன் பயனாக முத்தமிழ் கலைமணி, முத்தமிழ் கலைச்சுடர் மணி, நடன வேந்தன், நடனகலையரசன் உட்பட பல விருதுகள் கிடைத்தன. மதுரை பல்கலை பேராசிரியர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுடன் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். தமிழக அரசின் பொங்கல் விழாக்களில் வெளிநாட்டவர் முன்னிலையில் கரகாட்டம் நடத்தியுள்ளார். பெண் வேடமிட்டு ஆடுவது, பாடுவது, ஒருவர் தலைமீது வாழைக்காய் வைத்து, கண்ணைக் கட்டியபடி வாளால் வெட்டுவது, தீப்பந்த வளையத்தில் பாய்வது உட்பட வேறு சில சாதனைகளையும் செய்துள்ளார்.
சென்னை, டில்லி, அகமதாபாத், நாக்பூர் என பல நகரங்கள், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இவர் கரகமாடி மக்களின் கரகோஷத்தைப் பரிசாக பெற்றுள்ளார். இவரது திறமையை அறிந்த இயக்குனர் கங்கை அமரன், 'கரகாட்டக்காரன்'படத்தில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் ராமராஜனுக்கு இவர்தான் 'டூப்' போட்டு 'லாங்ஷாட்டில்' ஆடியிருப்பார்.
'ஆடிவெள்ளி', 'ஒருதலைராகம்' உள்பட பல திரைப்படங்களில் தலைகாட்டியுள்ளார்.
காலவெள்ளத்தில் இக்கலை நலிந்ததால் வறுமையின் பிடிக்குள் சென்று, மனைவி இறப்புக்கு பின் தனிமையானார்.


மதுரை சக்கிமங்கலம் அருகே கல்மேடு பகுதியில் அரசின் இயல், இசை, நாடக மன்றம் அளித்த இடத்தில் சிறுகுடிசையில் வசிக்கிறார். அங்கே தற்போது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச உணவு, உடை, கல்வி உபகரணத்தை சத்தமில்லாமல் வழங்குகிறார்.
இதற்கெல்லாம் தெரிந்தவர்களிடம் பொருட்களை கேட்டு வாங்குகிறார். பழைய துணிமணிகள், விழாக்களில், பிறந்தநாள், நினைவுநாளில் உணவை கொடுத்தால் அதனை குழந்தைகளுக்கு வழங்குகிறார். இவற்றை பெறுவதற்காக தினமும் மதுரை நகரெங்கும் சுற்றி வருகிறார்.

அவர் கூறியதாவது: கரகாட்டக்காரன் படத்தோடு அந்தக்கலையை விட்டுவிட்டேன். தற்போது வறுமையின் பிடியில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதனாலேயே முப்பது ஆண்டுகளாக குழந்தைகளுக்கு உதவி செய்து பொழுதை கழிக்கிறேன். பொதுமக்கள் பழைய துணிமணிகள், விழாக்களில் மீதமாகும் உணவு, படிக்க உபகரணங்களை தந்தால் குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

இவரை பாராட்ட 95243 80318.

Advertisement