எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பில் சோகம்; சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

சென்னை: சென்னை பெரம்பூரில், எஸ்ஜே சூர்யா நடிக்கும் கில்லர் திரைப்பட படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூரில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய போது வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன் என்ற நபர் உயிரிழந்து இருக்கிறார். மேலும் தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய 3 பேருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement