இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% ​​கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை

16

வாஷிங்டன்: இந்தியா உட்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவிகித இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் கட்டாய உழைப்பு (Forced-labour) முறைகள் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தற்போது கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தங்கள் சந்தைகளில் நுழைவதைத் தடை செய்யத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியா உட்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவிகித இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்கா தன் மீது சுமத்தியுள்ள இந்தக் 'கட்டாய உழைப்பு' சார்ந்த அவதூறு புகார்களையும் அனைத்தையும் இந்தியா மிகத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட 54 நாடுகள், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை அறிமுகப்படுத்தி, திறம்படச் செயல்படுத்தத் தவறிவிட்டதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த சூழலில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்கள் டில்லியில் தற்போது மூன்று நாட்கள் தங்கி இந்திய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடுகள் கட்டாய உழைப்பு முறையை தடுக்கும் வகையில் ஓரளவு நடவடிக்கை எடுத்து இருந்தால் 10% கூடுதல் வரி விதிக்கபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement