விடுதிகள், முதியோர் இல்லங்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்

கோவை: விதிமீறல் கண்டறியப்பட்டால், விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் 60க்கும் அதிகமான விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ளன. அதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் விடுதிகள், பெண் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களும் செயல்படுகின்றன.

இதுவரை பதிவு செய்யாமல் செயல்படும் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள் அனைத்தும், ‘சிம்ப்ளி கவர்ன்மென்ட்’ இணையதளம் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

போதுமான இடவசதி, தூய்மையான சுற்றுப்புறம், தங்கியிருப்போரின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை உறுதி செய்யப்படும் வகையில் இவ்விடுதிகள் செயல்பட வேண்டும். 

பதிவு மற்றும் உரிமம் பெறாத விடுதிகள், அதற்கு தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து உரிமம் பெறவும், ஆய்வுகளின் போது உரிய ஒத்துழைப்பு வழங்கி, அனைத்து சான்றிதழ்களையும் மக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement