மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைமேம்பாலம் :எஸ்கலேட்டர், லிப்ட் வசதியுடன் அமைகிறது

சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில், மேம்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நான்கு திசைகளிலும் ஏறி இறங்கும் வகையில், 370 அடி நீளத்தில், நவீன நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

அடையாறு, சர்தார் படேல் சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில், 85 கோடி ரூபாயில், 300 மீட்டர் நீளம், 20 அடி அகலத்தில், 'எல்' வடிவ மேம்பாலம் கட்டி, பிப்., மாதம் திறக்கப் பட்டது.

இந்த மேம்பால பணிக்காக, அங்கிருந்த இரும்பு நடைமேம்பாலம் அகற்றப்பட்டது.

அதற்கு மாற்றாக, எஸ்கலேட்டர், லிப்ட் வசதியுடன், 20 கோடி ரூபாயில் புதிதாக நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கைலாஷ் சந்திப்பில், கஸ்துாரிபாய் நகர் மேம்பால ரயில் நிலையம், சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் விநாயகர் கோவிலின் பின் பகுதி என, நான்கு இடங்களில் ஏறி இறங்கும் வகையில், 370 அடி நீளம், 18 அடி அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதில், அனைத்து இடங்களிலும் படிக்கட்டுகள் மற்றும் சர்தார் படேல் சாலையில் ஏறி, இறங்கும் வகையிலும், இதர மூன்று இடங்களில் ஏறும் வகையிலும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.

மேலும், ஓ.எம்.ஆர்., தவிர இதர மூன்று இடங்களில் 'லிப்ட்' வசதி அமைக்கப்படும். நிதி ஒதுக்கீடுக்கான கோப்புகள் காத்திருக்கின்றன. ஓரிரு மாதங்களில், பணி துவங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement