சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

குன்னுார்: குன்னுார் அருகே, கெந்தளா கிராமத்தில் இரண்டு சிறுத்தை நடமாடி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் - மஞ்சூர் சாலையில் கெந்தளா கிராமம் உள்ளது. இப்பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டம் செல்பவர்கள், இரவு நேரத்தில் வேலை முடித்து கிராமத்திற்கு வருபவர்கள், அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கெந்தளா கிராமத்தை ஒட்டிய பிரதான சாலையில் இரண்டு சிறுத்தைகள் சாலையை கடந்து செல்லும் காட்சி அங்குள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த அழகேந்திரன் கூறுகையில்,''வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து முதுமலையில் விட நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.

Advertisement