ஸ்வீடனில் இருந்து வந்த போன் அழைப்பு: துரிதமாக செயல்பட்டு உயிர் காத்த மதுரை தீயணைப்பு வீரர்கள்

11

மதுரை மாநகர் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரியான நாகராஜன்(85). இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்து வருகின்றனர்.

நாகராஜனின் மனைவி கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் நாகராஜன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகின்றார். இவருக்கு நாள்தோறும் ஆன்லைன் மூலமாக மூன்று வேளையும் உணவு டெலிவரி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நேற்று மதிய உணவை வீட்டின் வெளியே வைத்துசென்ற நிலையில் இரவு நேர உணவு கொண்டுவந்தபோது மதியம் டெலிவரி செய்யப்பட்ட உணவு எடுக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த உணவு டெலிவரி ஊழியர் எதிர் வீட்டில் கூறியுள்ளார்

பின்னர் ஸ்வீடனில் உள்ள நாகராஜனின் மகனுக்கு தகவல் அளித்தபோது நாகராஜனின் செல்போனை தொடர்பு கொண்ட போதும் நீண்ட நேரமாக போனை எடுக்காத நிலையில் ஸ்வீடனில் இருந்த மகன் மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து சென்ற மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நாகராஜனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது நாகராஜன் கழிவறை அருகே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட தீயணைப்புதுறையினர் நாகராஜனுக்கு ஆறுதல் கூறி எந்தவித பதற்றமும் படவேண்டாம் எனக்கூறி உறவினர்கள் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஸ்வீடனில் வந்த அழைப்பை ஏற்று முதியவரை மீட்ட பின்பு அவரை அரவணைத்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement