பரமக்குடி, பொதுவக்குடி ரயில்வே கேட்டில் சீரமைக்கப்படாத ரோடு

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பரமக்குடி: பரமக்குடி அருகே பொதுவக்குடி செல்லும் ரயில்வே கேட் ரோடு சீரமைக்கப்படாத நிலையில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

மதுரை– ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் பரமக்குடியில் பொதுவக்குடி, போர்டிங் ரோடு, வேந்தோணி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து ரயில்வே கேட் செயல்படுகிறது. இப்பகுதியில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பொதுவக்குடி ரயில்வே கேட்டை கடந்து 3 நெசவாளர் குடியிருப்புகள் உட்பட நுாற்றுக்கணக்கான வீடுகள், கல்லுாரி மற்றும் நான்கு வழிச்சாலை இணைப்பு செல்லும் ரோடு உள்ளது.

இந்த கேட் பகுதியில் ரயில்வே பாலம் சீரமைக்கப்பட்டு ரோடு அமைக்காமல் விட்டுள்ளனர். இதனால் டூவீலரில் செல்வோர் உட்பட சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் சிறிய மற்றும் கனரக வாகனங்கள் டயர்கள் கழன்று எதிரில் வருவோர் மீது கற்கள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்துகிறது.

இதனால் தினம் தினம் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக இந்நிலை உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆகவே ரயில்வே துறை உடனடியாக அனைத்து பகுதி ரயில்வே கேட் ரோடுகளும் முறையாக உள்ளதா என ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement