அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

உடுமலை: தமிழக அரசு விடுதிகளில் சேர, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள், மாணவியர்க்கு என, 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல், 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த விடுதிகளில் எந்த கட்டணமும் இல்லாமல், மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், பயிற்சி நுால்கள் வழங்கப்படுகிறது.

விடுதிகளில் சேருவதற்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.

விடுதிகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், மாணவியர், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பள்ளிகளுக்கான விடுதிகளுக்கு, வரும் 18ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளுக்கு, ஜூலை, 15க்குள், விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் பொழுது, ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

Advertisement