வாழை சாகுபடியில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம்
உடுமலை: ஓராண்டு சாகுபடியான வாழையில், குறுகிய கால காய்கறி பயிர்களை சாகுபடி செய்து, உடுமலை பகுதி விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் பகுதியில், அதிக அளவில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலை அருகே, நீர் வளம் மிக்க, ஏழு குள பாசனப்பகுதிகளில், வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
ஓராண்டு பயிரான வாழையில், கூடுதல் வருவாய் பெற விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழைக்கன்றுகள் வளரும் வரை, இடைவெளியில் தக்காளி, கத்தரி போன்ற குறுகிய கால காய்கறி பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்டுகின்றனர். கோவை வேளாண் பல்கலை., மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பிலும், வாழையில், ஊடுபயிர் செய்ய பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது. அதன்படி, வாழை போன்ற ஓராண்டுப்பயிரில் ஊடுபயிர் சாகுபடி செய்வது சிறந்ததாகும்.
இதனால், கூடுதலாக ஒரு வருமானம் கிடைப்பதுடன் நல்ல ஊட்டச்சத்து உணவுக்கும் வழிவகுக்கிறது. இப் பகுதியில், வாழையில் ஊடுபயிராக பரவலாக தக்காளி சாகுபடி செய்கின்றனர்.
மேலும், முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், மிளகாய், கத்திரி, கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி வகைகள், செண்டுமல்லி ஊடுபயிராக பயிரிடவும் பரிந்துரைக்கப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'வாழையில் ஊடுபயிராக பல்வேறு காய்கறி பயிர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பிற ஊடுபயிர்கள் குறைந்தளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.