அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

8

சென்னை: 'அறம், பொருள், இன்பம்' என்ற பெயரில், அனைத்து துறைகளிலும் 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணி அமைச்சரவையில், 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. காலை 10:05 மணிக்கு துவங்கி, 11:20 வரை நடந்தது.

இதில், சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் கட்டுப்பாடு, பருவ மழை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலில், வெற்றி தமிழகம் என்ற பெயரில், த.வெ.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, 'அறம், பொருள், இன்பம்' என்ற பெயரில், 10 அம்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. 'அறம்' என்ற செயல் திட்டத்தின் கீழ், தமிழ் அடையாளம் மற்றும் அதன் பெருமையை மேம்படுத்த, 52 தொலைநோக்கு திட்டங்களும், மக்களின் கண்ணியமான வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய, 93 தொலைநோக்கு திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன.

'பொருள்' என்ற செயல் திட்டத்தின் கீழ், மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் நலன், உலக தரத்திலான கல்வி, வளமான தமிழகம் என்ற இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

'இன்பம்' என்ற செயல் திட்டத்தின் கீழ், மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல், உலகத் தரமான கட்டமைப்பு, மக்கள் அரசு, நேர்மையான நிர்வாகம் ஆகியவை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு, 54 பிரிவுகளின் கீழ் மொத்தமாக, 436 தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. துறை வாரியாக, அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதற்கான வழிமுறைகள் குறித்து, அமைச்சர்களுக்கு முதல்வர் எடுத்துரைத்தார்.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:


முதல்வர் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் செயல்படுத்த, 436 செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மின் துறைக்கு 10 செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

அதேபோன்று, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மக்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகளுடன், அமைச்சர்கள் ஆலோசனை செய்து, அதற்கான வழிமுறைகளை உருவாக்க, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, துறை வாரியாக அமைச்சர்கள் ஆலோசனை செய்து, எவ்வளவு விரைவில் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வர். அதன்பின், முதல்வரின் ஒப்புதல் பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை



'மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி லஞ்சம், ஊழலற்ற நேர்மையான அரசை நடத்த வேண்டும். இதை மனதில் வைத்து, அனைத்து அமைச்சர்களும் பணியாற்ற வேண்டும். எந்த இடத்திலும் லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்க கூடாது' என, அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 'அமைச்சர்கள் அனைவரும் என் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். அதை மீறி, ஏதாவது குற்றச்சாட்டுகள் எழுந்தால், ஜெயலலிதா பாணியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், அமைச்சர்களை, முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.block_B

Advertisement