தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை

15

சென்னை: சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கடந்த ஏப்., 29ல், எப்போதும் இல்லாத அளவாக, 21,307 மெகா வாட்டாக அதிகரித்தது. வழக்கமாக ஜூனில் வெயில் சற்று குறையும். ஆனால், இம்மாதத்தில் வெயில் குறையாததால், வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகம் உள்ளது.

அதற்கு ஏற்ப, மின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், பல மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் கூறியதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின் தடை, ஒவ்வொரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக இரண்டு மணி நேரமும், குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

இதற்கு, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் இல்லை என்பதே காரணம். ஒரு பகுதியில், 1400 மெகா வாட் வரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் தயாராக இருந்தும், அவைகளுக்கு துணை மின் நிலையங்களுடன் இணைப்பு வழங்காததால், மின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; இதுவே, மின் தடைக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement