தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!

79

நமது சிறப்பு நிருபர்



தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, டில்லியில் கடந்த 2ம் தேதி, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்திருந்தார். அதை, அக்கட்சி தலைமை ஏற்றுள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை, கட்சி தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அளித்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும், அரசியல் நடத்தப்படும் முறையை மேம்படுத்தவும், ஆறு ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தேன்.

அதை விட முக்கியமாக, அரசியல் என்பது மேல்மட்டத்தினருக்கும், சிலருக்கும் மட்டுமே உரிய பாதை அல்ல; சாதாரண மக்களுக்குமான பாதை என்பதை காட்ட விரும்பினேன். மிக இளம் வயதிலும், அனுபவம் குறைந்த நிலையிலும், என் மீது நம்பிக்கை வைத்து, முக்கிய பொறுப்புகளையும், தலைமை பதவிகளையும் வழங்கிய பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி.

தேசிய கட்சிகள், தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பேசவில்லை. இந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்தேன். உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் வந்த பல தடைகள், இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி, அதில் ஓரளவு வெற்றியையும் கண்டேன். கட்சியின் மூத்த தலைமையுடன் நடந்த கலந்துரையாடல்களுக்கு பின், தமிழகம் சார்ந்த விஷயங்களில் எங்களது பார்வைகள் ஒன்றுக்கொன்று ஒருமித்து போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

நீண்ட சிந்தனைக்கு பின், கட்சியில் இருந்து விலகி, நான் அரசியலுக்கு வந்த உண்மையான நோக்கத்தை மறுபரிசீலனை செய்து, எதிர்காலத்தில் வாழ்க்கை என்னை எங்கு அழைத்து செல்கிறதோ, அந்த பாதையில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நம்புகிறேன். எனவே, கட்சியில் நான் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனே என்னை விடுவிக்குமாறும், பா.ஜ., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, நான் அளிக்கும் ராஜினாமாவை உடனே ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement