புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? 20 ஆண்டுகளாக அரசு நிதி பாழாகும் அவலம்

பெண்ணாடம்:பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் கட்டி 20 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பாழாவதுடன், சமூக விரோதிகள் கூடாரமாகியுள்ளது.

மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டமாகவும் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், சினிமா தியேட்டர், ஜவுளி, நகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், பெண்ணாடத்தையொட்டி அரியலுார் மாவட்ட எல்லையில் இரண்டு சிமென்ட் ஆலைகள் உள்ளன.

பெண்ணாடத்திற்கு சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்தி மங்கலம், தாழநல்லுார், இறையூர், முருகன்குடி, துறையூர் மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்களான சிலுப்பனுார், சேந்தமங்கலம், ஈச்சங்காடு, மதுரா, செங்கமேடு உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம் வந்து செல்கின்றனர். இதனால், பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள், பொது மக்கள் அவதி அடைந்தனர்.

பொது மக்கள் கோரிக்கையேற்று, கடந்த 2006ல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரூ. 53 லட்சத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு, ஒரிரு வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தொடர்ந்து, பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் வருகையின்றி காட்சிப்பொருளானதுடன் சமூக விரோதிகளின் கூடாரமாக பஸ் நிலையம் மாறி வருகிறது.

எனவே, பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொணடுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement