தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு :புதிதாக கட்ட நடவடிக்கை தேவை 

திண்டிவனம்: திண்டிவனத்தில் தீயணைப்பு வீரர்களுக்காக கட்டப்பட்ட ஊழியர் குடியிருப்பு சேதமடைந்துள்ள நிலையில், புதிய குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள தீயைணப்பு நிலைம் அருகே தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கடந்த 2002ம் ஆண்டு 20 வீடுகள் கொண்ட ஊழியர் குடியிருப்பு, காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டது.

தீயணைப்பு நிலையத்தில் பக்கத்திலேயே ஊழியர்கள் குடியிருப்பு இருந்ததால், ஊழியர்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் குடியிருப்பு மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த 2017ம் ஆண்டு, ஊழியர்கள் அனைவரும் காலி செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஊழியர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். ஊழியர் குடியிருப்பை காலி செய்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை புதிதாக ஊழியர் குடியிருப்பு கட்டித்தரப்படவில்லை.

இதற்கிடையே, கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தை இடித்துவிட்டு, புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கட்டுவதற்காக 5.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 4 மாதங்களுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தற்போது தற்காலிகமாக திண்டிவனம் தீயணைப்பு நிலையம் ஜெயபுரத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது கட்டப்பட்ட உள்ள புதிய தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்திற்கு பக்கத்திலேயே, புதிதாக தீயணைப்பு ஊழியர் குடியிருப்புகளைக் கட்ட காவலர் வீட்டு வசதி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement