டில்லியில் கூடியது இண்டி கூட்டணி கூட்டம்; விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

17

புதுடில்லி: இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் விசிக, மதிமுக உள்ளிட்ட 23 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சோனியா, கேசி வேணுகோபால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது உறவினரும், கட்சி நிர்வாகியுமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சூலே, தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதே போல, உத்தவ் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்பட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், விசிக, மதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தவெக அரசில் காங்கிரஸ் இணைந்து விட்டது. அதனால் அதிருப்தி அடைந்த திமுக, இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலுடன் கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் அந்த கட்சியும் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. 2029 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, எதிர்கால செயல்திட்டம் மற்றும் பாஜ அரசை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Advertisement