திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து கேள்வி; முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் ரமேஷ் பதில்

26


பழநி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் முடிவு செய்வார் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வந்தார். கொடைக்கானல் சாலை சந்திப்பில் அலங்கார நுழைவாயில், கிரிவீதியில் ராக்கால நந்தவனத்தை பழநி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., ரவிமனோகரனுடன் இணைந்து திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் எம்.எல்.ஏ., ரவிமனோகரன் படம், பெயர் இடம் பெறாதது குறித்து அ.தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர். இதற்காக எம்.எல்.ஏ.,விடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

வரிசையில் நின்று தரிசனம் ரோப்கார் மூலம் பழநி முருகன் கோயிலுக்கு சென்ற அமைச்சர் பொது தரிசன வழியில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்ற அவர் பக்தர்களோடு வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து அன்னதானம் உட்கொண்டார். ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழநி கோயிலில் நடந்து வரும் கட்டுமான பணிகள், அன்னதானத்தின் தரம், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் கோயில் செயல்பாடுகள் வியாபார நோக்கில் நடந்துள்ளன. அதை மாற்றி பக்தர்கள் பயன்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் முடிவு செய்வார். அமைச்சர் என்ற முறையில் ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்றார்.

Advertisement