இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: முத்தரப்பு ஒருநாள் போட்டியில்

தம்புலா: முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லீக் போட்டியில் இந்தியா 'ஏ' அணி, 4 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

இலங்கையில், முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் விளையாடுகின்றன. தம்புலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இந்தியா 'ஏ' அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (44), பிரப்சிம்ரன் சிங் (84) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இந்தியா 'ஏ' அணி 24.3 ஓவரில் 174/3 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், 49 ஓவர் கொண்ட போட்டியாக தொடர்ந்தது. ருதுராஜ் கெய்க்வாட் (66), கேப்டன் திலக் வர்மா (66) அரைசதம் கடந்தனர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் (40) ஓரளவு கைகொடுக்க, இந்தியா 'ஏ' அணி 49 ஓவரில் 349/9 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு ஹசன் ஈசாகில் (34) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் இம்ரான் மிர் (75*), பஹிர் ஷா (51*) அரைசதம் கடந்தனர். ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 25.5 ஓவரில் 177/2 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement