கோலாகலமாக துவங்கியது 'உலக' கால்பந்து * மெக்சிகோவில் ரசிகர்கள் கொண்டாட்டம்
மெக்சிகோ: உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன், மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடக்கிறது. முதன் முறையாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான துவக்கவிழா மூன்று மைதானங்களில் நடக்கிறது. நேற்று மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடந்தது.
போட்டி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன், ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 'கால்பந்து அனைவரையும் ஒன்றிணைக்கிறது' என்ற 'பிபா' நோக்கத்தை தெரிவிக்கும் வகையில் துவக்கவிழா அமைந்தது. நம்பகத்தன்மை, பாரம்பரியம், பெருமை கொண்ட தேசம் மெக்சிகோ, என வாசகத்துடன் மெக்சிகோ கலைஞர்கள் திறமை வெளிப்படுத்தினர்.
'மானா' என்ற மெக்சிகோ இசைக்குழுவினர் பாடல்கள் பாடினர். பின் லத்தீன் ராப் பாடகர் பால்வின், திறமை வெளிப்படுத்தினார்.
அடுத்து கொலம்பிய பாடகி ஷகிரா வந்தார். தங்களது தேசத்தின் நிறத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற உடையுடன் காணப்பட்டார். நைஜீரியாவின் பாடகர், பாடலாசிரியர் பர்னா பாயுடன் இணைந்து 'டாய்..டாய்' என்ற பாடலை பாட, மைதானத்தில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் இணைந்து ஆரவாரம் செய்தனர்.
7200 அடி உயரம்
மெக்சிகோ சிட்டியில் உள்ளது எஸ்டாடியோ அஸ்டெகா மைதானம். கடந்த 1970, 1986 உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனல் இங்கு நடந்தன. தற்போது ரூ. 1400 கோடி முதல் 2,865 கோடி செலவில் மைதானம் சீரமைக்கப்பட்டுள்ளது.
* உலகின் 8வது பெரிய கால்பந்து மைதானமான இங்கு 87,523 பேர் அமர்ந்து ரசிக்கலாம். கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் உள்ளதால், இங்கு விளையாடுவது கடினம்.
முதன் முறை
'பிபா' உலக கோப்பை தொடரை மூன்றாவது முறை நடத்திய முதல் நாடு மெக்சிகோ (1970, 1986, 2026). இதற்கு முன் பிரேசில் (1950, 2014), ஜெர்மனி (1974, 2006), இத்தாலியில் (1934, 1990) தலா இரு முறை நடந்தன.