'செலவு பண்ண வழியில்லையோ?'

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது.

இதில் மாவட்டச் செயலர் சிவசாமி பேசுகையில், 'தேர்தல் தோல்வி நிரந்தரமானது அல்ல. 1996 சட்டசபை தேர்தலில் நான் தோற்றேன்; அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றேன். 2001 சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ., ஆனேன். இப்படி, அடுத்தடுத்த தேர்தல்களில் பதவி வரும்.

'அ.தி.மு.க.,வின் தற்போதைய தோல்வியும் அப்படித்தான்; நிரந்தரமானது அல்ல. அப்போதெல்லாம், அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், சொந்த காசை செலவு பண்ணியே கட்சியை வளர்த்தோம்' என்றார்.

இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'எதிர்க்கட்சியா இருந்தப்ப, மாவட்டச் செயலரா இருந்து செலவு செஞ்சேன். ஆளும் கட்சியானதும் என்னை ஓரம் கட்டிட்டாங்க. 15 வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் மாவட்டச் செயலர் ஆனாலும், செலவு பண்ண வழியில்லன்னு மறைமுகமா சொல்றாரோ' எனக் கூற, சக நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.

Advertisement