அரசியலுக்கு முழுக்கு?

'பாவம்; இவருக்கா இந்த நிலை...?' என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது விசுவாசிகள்.

மேற்கு வங்கத்தில், தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர், மம்தா. 'வங்கத்து புலி' என, சக அரசியல் தலைவர்களால் அழைக்கப்படும் அளவுக்கு துணிச்சலாக செயல்பட்டவர்.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், இவரது கட்சி படுதோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறி கொடுத்தது.

இதையடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக விலகி, பா.ஜ.,வில் ஐக்கியமாகி வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், மம்தாவை புறக்கணித்து விட்டு, தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதேபோல், கட்சியின் 20 எம்.பி.,க்களும் தனி கோஷ்டியாக செயல்பட முடிவு செய்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூன்று பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தான் உருவாக்கிய கட்சி, தன் கண் முன்பாகவே உடைந்து சுக்கு நுாறாவதை, மம்தாவால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து, திரிணமுல் கட்சியை காங்கிரசுடன் இணைக்க, மம்தா முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'இவ்வளவு அவமானத்தை தாங்கிக் கொள்வதற்கு பதிலாக, அரசியலுக்கு முழுக்கு போடுவது தான் மம்தாவுக்கு நல்லது...' என்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

Advertisement