இதே நாளில் அன்று

ஜூன் 13:

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், கந்தசாமி முதலியார் -- அமிர்தம் அம்மையார் தம்பதியின் மகனாக, 1917, ஜனவரி 14ல் பிறந்தவர் க.வெள்ளைவாரணனார்.

இவர், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவார பாடசாலையில், திருமுறைகளை இசையுடன் பாட கற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், வித்வான் படிப்பை முடித்தார்.

தஞ்சை கரந்தை தமிழ் கல்லுாரி, அண்ணாமலை பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றினார். ஓய்வுக்கு பின், மதுரை காமராஜர் பல்கலையில் சிறப்பு பேராசிரியராகவும், தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றினார்.

இவர் எழுதிய, 'பன்னிரு திருமுறை வரலாறு, தில்லை பெருங்கோவில் வரலாறு, தேவார அருள்முறை திரட்டுரை, இசைத்தமிழ், சங்ககால தமிழ் மக்கள்' உள்ளிட்ட நுால்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

'கலைமாமணி, சித்தாந்த செம்மல்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 71வது வயதில், 1988ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement