கோவைக்கு தேவை 25 இணைப்பு சாலைகள்

கோவை: கோவையின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க, மண்டலத்துக்கு ஒன்று வீதம் 5 மண்டலங்களில், 5 ஆண்டுகளில் 25 இணைப்பு சாலைகள் உருவாக்க வேண்டும் என்கின்றனர் தொழில்துறையினர்.

கோவை மாநகர எல்லையை 257.04 சதுர கி.மீ., பரப்பில் இருந்து 438.54 சதுர கி.மீ., என விஸ்தரிக்க தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டது; செயல்பாட்டுக்கு வரவில்லை. எதிர்காலத்தில் நகரம் விரிவடைவதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்.

ஏனெனில், தற்போதுள்ள பிரதான ரோடுகள் வாகன பெருக்கத்தால் திணறி வருகின்றன; பீக்ஹவர்ஸில் ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. நெருக்கடி தவிர்க்க ஒவ்வொரு ரோட்டிலும் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதுவே நிரந்தர தீர்வாகாது. ஒரு ரோட்டுக்கும் இன்னொரு ரோட் டுக்கும் இடையே இணைப்பு சாலை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, சங்கனுார் பள்ளத்தின் கரையில் சாலை வசதி ஏற்படுத்தினால், மேட்டுப்பாளையம் ரோடு - சத்தி ரோடு - அவிநாசி ரோடு - திருச்சி ரோடு செல்லலாம். இத்திட்டத்தை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்தார். ஆமை போல் மெல்ல மெல்ல நகர்கிறது. போதிய நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 இணைப்பு சாலை உருவாக்க அறிவிப்பு வெளியிட்டது. ரூ.144.80 கோடி ஒதுக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். உள்ளூர் திட்ட குழும நிதி கேட்டு கருத்துரு அனுப்பியதற்கு, இணைப்பு சாலை உருவாக்க உத்தேசத்துள்ள பகுதிகளில் ஏராளமான கட்டடங்கள் இருக்கின்றன; இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தி, இணைப்பு சாலை உருவாக்க வேண்டாமென கூறியதால், அத்திட்டம் கைவிடப்பட்டது.

அவிநாசி ரோடு - சத்தி ரோடு 2010ல் செம்மொழி மாநாடு நடந்தபோது, கொடிசியா - தண்ணீர் பந்தல் ரவுண்டானா சாலையில் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி அருகே துவங்கி என்.ஆர்.ஐ. கார்டனில் இணைந்து எஸ்.ஆர். அவென்யூ, கோ ஆப்ரேட்டிவ்-இ காலனி மற்றும் ஸ்ரீராகவேந்திரா அவென்யூ வழியாக சேரன் மாநகர் 4வது பஸ் ஸ்டாப் வழியாக திட்டச்சாலையில் இணந்து விளாங்குறிச்சி வழியாக சத்தி ரோடு செல்லும் வகையில் வழித்தடம் இறுதி செய்யப்பட்டது. நில உரிமையாளர்கள் பலரும் தானமாக இடம் கொடுக்க முன்வந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காததால், இன்னும் இழுபறியாகவே இருக்கிறது.

இதேபோல், பீளமேடு பி.எப். அலுவலர் குடியிருப்பு வழியாக திட்டச்சாலை உருவாக்குவது தொடர்பாக நகரமைப்பு பிரிவினர் பலமுறை ஆய்வு செய்தனர். நிலம் கையகப்படுத்த சிரமம் ஏற்பட்டதும் கிடப்பில் போட்டு விட்டனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கள ஆய்வு செய்து, நில அளவீடு செய்து, கருத்துரு அனுப்பியும் பல்வேறு இணைப்பு சாலைகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் ஒரு திட்டச்சாலையோ, இணைப்பு சாலையோ ஏற்படுத்தவில்லை.

இதே நிலை இனியும் தொடரக்கூடாது. வாகன பெருக்கம், போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, இணைப்பு சாலை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உணர்ந்து செயல்பட வேண்டும் என தொழில்துறையினர் நினைக்கின்றனர்.

@block_B@

'கமிட்டி அமைக்கணும்'



கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறியதாவது: நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 100 இணைப்பு சாலைகள் உருவாக்க வேண்டும். முதல் கட்டமாக, 25 இணைப்பு சாலை ஏற்படுத்தினால், பிரதான சாலைகளில் நெருக்கடி தவிர்க்கலாம். செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில், பன்மால் ரோடு, கொடிசியா ரோடு, எஸ்.என்.ஆர். ரோடு உருவாக்கப்பட்டன. அவை தற்போது நல்ல பலன் அளிக்கின்றன. அதனால், நிலம் கையகப்படுத்த செலவு செய்வதை பெரிதாக நினைக்காமல், இணைப்பு சாலையின் அவசியத்தை உணர்ந்து உருவாக்க வேண்டும். இதற்கென பிரத்யேக கமிட்டி உருவாக்க வேண்டும். அதில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் தவிர தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும். மாதந்தோறும் கூட்டம் நடத்தி, முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.block_B

Advertisement