முதல்வர் ரங்கசாமி கவர்னருடன் திடீர் சந்திப்பு

1

புதுச்சேரி: அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணாராவ் பொறுப்பேற்றனர்.

தொடர்ந்து நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் அன்பழகன், கடந்த 20ம் தேதி எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவை விரிவாக்கம் நீண்ட இழுபறிக்கு பின் என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பா.ஜ.,வை சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாக நியமித்திட கடந்த 8ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

அதனையொட்டி வரும் 17ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு, கடற்கரை சாலையில் உள்ள லோக் நிவாசிற்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார்.

அப்போது, அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை வரும் 17 ம் தேதி நடத்திட வேண்டி முதல்வர் ரங்கசாமி முறைப்படி கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Advertisement