அ.தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., இணையாது: தினகரன் திட்டவட்டம்

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., இணையாது,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கு பின், சில நிர்வாகிகள் தங்கள் சொந்த காரணங்களுக்காக அ.ம.மு.க.,வை விட்டு விலகியுள்ளனர்.

அவர்கள், கட்சியை கூண்டோடு கலைத்து விட்டதாக சொல்வது பொய். அவர்களுக்கு பின், கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காக, எங்களுக்குள் இருந்த மன வருத்தங்களை மறந்து, சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம்.

கூட்டணி தர்மப்படி, தேர்தலுக்கு பின்னரும், தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,விற்கு உறுதுணையாக உள்ளோம்.

'அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைய வேண்டும்; அதற்கு இது தான் சரியான நேரம்' என பலர் கூறினாலும், கட்சி நிர்வாகிகள் இது குறித்து என்னிடம் பேசவில்லை. அ.ம.மு.க., என்றைக்கும் தனித்துவமான இயக்கமாக தொடர்ந்து செயல்படும்.

விவசாய கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளில், மக்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏமாற்றி உள்ளனர். மக்கள் பிரச்னை குறித்து பேசாமல், சமூக ஊடகங்களில் 'ரீல்ஸ்' போட்டு, ஆட்சியாளர்கள் காலம் கடத்துகின்றனர்.

இதனால், 'இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆட்சி' என, மக்கள் விமர்சிக்கின்றனர்.

இது புதிய ஆட்சியாக தெரியவில்லை. தி.மு.க., அரசின் நீட்சியாக உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என, நினைத்துக் கொண்டு ஒரு பேராபத்தை மக்கள் கொண்டு வந்துள்ளனர்.

த.வெ.க., அமைச்சர்கள் முதல், அனைத்து நிர்வாகிகளின் செயலும் அப்படித்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement