செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

மதுரை: ‛‛செயற்கை நுண்ணறிவுக்கு முழுமையாக மனிதன் தலையாட்டினால் அது முதலாளியாகிவிடும்'' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர் சங்க சட்ட எழுத்தறிவு கிளப் சார்பில், ‛செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஆற்றல்' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தலைவர் அருள் வடிவேல் சேகர் வரவேற்றார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. முழுமையாக நம்பி, அதன் மூலம் வரக்கூடிய முடிவுகளுக்கெல்லாம் மனிதன் தலையாட்டினால் அது முதலாளியாகிவிடும்.

எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று நம்மிடமுள்ள பிரச்னைகளை அதனிடம் ஒப்படைத்தால், வெற்றிகரமான இலக்கை அடைய எந்த வகையிலும் உதவாது. உலகம் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் சுழல்கிறது. குறைந்த உழைப்பில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணம் மனிதனிடம் அதிகரித்துள்ளது.

அதற்கு மனிதன் தேர்ந்தெடுத்த வழிதான் செயற்கை நுண்ணறிவு. புத்தகங்கள் அறிவை விரிவு செய்யும். ஒரு மனிதன் புத்தகத்தை வாசிக்கும்போது மூளை விசாலமாகிறது. அதன் மூலம் புதிய படைப்பாளி உருவாகிறான். சிந்தனை பெரிதாகிறது. அதிலிருந்து உருவாகக்கூடிய அனைத்து செயல்களும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றார். வழக்கறிஞர் முகமது முகைதீன் நன்றி கூறினார்.

Advertisement