என்னை மட்டம் தட்டியவர்களுக்கு சிற்பங்கள் செய்து பதிலடி தருகிறேன்!
கண்ணாடி இழை எனப்படும், 'பைபர்' மற்றும் மண் சிற்பங்களை கைகளால் வடிவமைக்கும், புதுச்சேரி அருகில் உள்ள பூரணங்குப்பத்தை சேர்ந்த பெண் சிற்பி அறிவழகி: சிறு வயது முதலே கைவினை பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம். களிமண்ணில் கிளி, விநாயகர் என, சிறு உருவங்கள் செய்து பழகினேன். பள்ளியில் படிக்கும்போதே, கலை சார்ந்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
பிளஸ் 2 முடித்ததும், புதுச்சேரியில், 'பேச்சுலர் ஆப் விஷுவல் ஆர்ட்ஸ்' எனப்படும் காட்சி கலை இளங்கலை படிப்பில் சேர்ந்தேன்.
முதலாண்டு படிப்பு முடிந்ததும், விருப்ப பாடமாக சிற்பக் கலையை தேர்ந்தெடுத்தேன். வகுப்பறைக்கு சென்றபோது, பெண்கள் எவரும் இல்லை என்பதால், சிற்பக்கலை வேண்டாம் என விட்டு விட்டேன்.
இப்போது, ஆண்களுடன் போட்டி போட்டு சிற்பங்களை உருவாக்கும் எனக்கு, அன்று வகுப்பறையில் இருந்த 10 மாணவர்களை எதிர்கொள்ள முடியாமல் போய் விட்டதே என, வருத்தமாக இருக்கிறது.
காட்சி கலை படிப்பில் முதுகலை முடித்ததும், களிமண், வெள்ளை சிமென்ட் என எனக்கு தெரிந்த முறையில் சிற்பங்கள் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அந்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன.
நான் செய்த சிலைகளை, படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை பார்த்த நண்பர்கள், தங்களுக்கும் அது போன்ற சிலைகள் செய்து தரும்படி கேட்டனர். அதன் வாயிலாக, வெவ்வேறு உருவங்கள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. களிமண், சிமென்ட் சிலைகள் செய்வதில் கைதேர்ந்த நிலையில், 'பைபர்' சிலைகள் பிரபலமாகின.
மண் சிலை வீணானால், மீண்டும் வடிவத்துக்கு கொண்டு வந்து விடலாம்; ஆனால், பைபர் அப்படியில்லை... மொத்தமும் வீணாகிவிடும். பைபர் சிலைகள் செய்ய அதிக நேரமாகும்; ஒழுங்காக வராது. விரக்தி மனநிலை வரும். இதற்கு, அதீத பொறுமை அவசியம்.
பைபர் சிலைகளை செய்து, காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தேன்; அதுவும் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்போது, எவ்வளவு பெரிய உருவங்களையும் என்னால் செய்ய முடியும்.
தொடர்ந்து, 'ஆர்டர்'கள் வந்தபடியே உள்ளன. இந்த தொழிலை பொறுத்தவரை, எவரையும் போட்டியாக நினைப்பது இல்லை. நேற்று செய்ததை விட, இன்று இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் என் இலக்கு.
ஒரு சிலையை வடிவமைப்பதன் வாயிலாக, நான் உருவத்தை மட்டும் உருவாக்கவில்லை. 'பெண்களால் சிற்பம் செய்ய முடியாது' என்று மட்டம் தட்டியவர்களுக்கு, நான் செய்த சிற்பங்கள் வாயிலாக பதிலடியும் கொடுக்கிறேன்.
மேலும்
-
காளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
-
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
-
முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் பயிற்சி
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
-
கிரைம் கார்னர்: கோவை