பைக் டாக்சிக்கு விதிகள் எப்போது? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

8

மதுரை: தமிழகத்தில் தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகள் உருவாக்க தாக்கலான வழக்கில், எப்போது விதிகள் கொண்டுவரப்படும் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் பைக்டாக்சி சேவையை முறைப்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகள் இல்லை. பிற டாக்சி சேவைகளை போல அல்லாமல், பைக் டாக்சி சேவையை தனிநபர்களால் செயல்படுத்த முடியாது. அவை முழுமையாக தனியார் நிறுவன (அகரிகேட்டர்) செயலிகள் மூலமே இயக்கப்படுகின்றன.

'அகரிகேட்டர்' நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அவற்றில் பணிபுரியும் பைக் டாக்சி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது அரசியல் அமைப்பின் சமத்துவம், வாழ்வுரிமை கொள்கைக்கு எதிரானது.

'அகரிகேட்டர்' நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க, அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், இன்சூரன்ஸ், புகார்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சிவா ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எப்போது விதிமுறைகள் கொண்டு வரப்படும். இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை முதன்மை செயலர், தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலர், கமிஷனர் ஜூலை 6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement