ஆசிரியரும் பற்றாக்குறை; வகுப்பறையும் குறைவு: சாதிக்கும் அரசு பள்ளிக்கு சோதனை

பெருமாநல்லுார்:திருப்பூர் அடுத்த கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் இல்லாததால் ஆயிரத்து 700 மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் நல்ல தேர்ச்சி விகிதம் இருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிகளவில் மாணவர்கள் சேர்கின்றனர். மொத்தம் உள்ள மாணவர்களில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் ஆங்கில வழியிலும், 400 பேர் தமிழ் வழியிலும் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப போதிய ஆசிரியர்கள் இல்லை. மேல்நிலை வகுப்புகளில் மட்டும் 5 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், கணிதம் ஆகிய முக்கிய பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். நடப்பு ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு இதுவரை ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. இதுபோல, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் பாட ஆசிரியர்களுக்குக் கடும் பற்றாக்குறை நீடிக்கிறது.

பள்ளி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் கூறுகையில், ''பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வியையே அதிகம் விரும்புவதால் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் உயர்கிறது. ஆனால், போதிய இடவசதி இல்லாததால் ஒரு பெஞ்சில் 5 மாணவர்கள் வரை நெருக்கடியாக அமரும் நிலை உள்ளது. இதனால் அவர்களால் பாடத்தை ஒழுங்காகக் கவனிக்க முடிவதில்லை. கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வித் துறைக்கும் மனு அளித்துள்ளோம் என்றனர்.

.

Advertisement