புதுச்சேரியில் நிலப்பயன்பாடு நடைமுறைகள்... அதிரடி மாற்றம்:தானியங்கி முறையில் வருகிறது 'அப்டேட்'

புதுச்சேரி: புதுச்சேரியின் நிலப்பயன்பாடு மாற்ற நடைமுறைகள், டைனமிக் மாஸ்டர் பிளான் ஒழுங்குமுறை விதிகளாக மாற்றப்பட்டு புதிய பரிணாமம் பெற்றுள்ளது.

புதுச்சேரி நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறையானது, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் புதிய குடியிருப்புகள், சாலைகள், தொழிற்பேட்டைகள் மற்றும் பொது வசதிகள் எங்கு அமைய வேண்டும் என்பதற்கான நீண்டகால மற்றும் குறுகிய கால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குகிறது.

வீடு அல்லது வணிக வளாகம் கட்ட விரும்பினால், இத் துறையின் வழிகாட்டுதல்கள் மற்றும் மண்டல ஒழுங்குமுறைகளின் படியே வரைபட ஒப்புதலும், கட்டட அனுமதியும் பெற வேண்டும். விவசாய நிலங்களை குடியிருப்பு அல்லது வணிக பயன்பாட்டிற்கான நிலங்களாக மாற்றுவதற்கு இத் துறையிடம் தான் அனுமதி பெற வேண்டும். நிலம் விவசாயத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்தால், அங்கு சட்டப்படி வீடு அல்லது தொழிற்சாலை கட்ட முடியாது. அதை மாற்றும் செயல்முறையே நில பயன்பாட்டு மாற்றம்.

இதற்காக 1969ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதுச்சேரி நிலப்பயன்பாடு மாற்ற ஒழுங்குமுறை விதிகளில் புதிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுதும் உடனே நடைமுறைக்கு வருகின்றன.



டைனமிக் மாஸ்டர் பிளான்:: ஏற்கனவே புதுச்சேரி நிலப்பயன்பாடு மாற்ற ஒழுங்குமுறை விதிகள், 2022 என்று அழைக்கப்பட்ட இந்த விதிகள், தற்போது புதுச்சேரி டைனமிக் மாஸ்டர் பிளான் ஒழுங்குமுறை விதிகள், என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இத் திருத்தத்தின் மிக முக்கிய அம்சமாக நிலப்பயன்பாட்டு மாற்றங்களை எளிமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை நிலங்களை மாற்றுவதற்கு, தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணத்தைச் செலுத்தினால் தானியங்கி முறையில் ஆன்லைன் வழியாகவே உடனே அனுமதி வழங்கப்படும்.



1,000 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவில் வீடு கட்ட விரும்பும் குடியிருப்பு நிலங்கள், வெள்ளை மற்றும் பச்சை பிரிவுகளின் கீழ் வரும் தொழிற்சாலைகள், தனியார் தொழிற்பேட்டைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பின்டெக் வளாகங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனக் கட்டடங்கள் இதன் மூலம் உடனடியாக பலனை பெற முடியும்.



புதிய நடைமுறை:: பெரிய குடியிருப்பு நகரியங்கள், லே-அவுட்கள் மற்றும் இதர பெரிய திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டும் என விதிகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் ஏதேனும் விடுபட்ட விவரங்கள் இருந்தால், விண்ணப்பித்த 5 வேலை நாட்களுக்குள் திட்டக்குழுமம் அதை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் அந்த நிலத்தை கள ஆய்வு செய்ய வேண்டும்.

நிலமாற்ற முன்மொழிவு விளம்பரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். கருத்துகள் பெறப்பட்ட நாட்களுக்குள் திட்டக்குழுமத்தின் உறுப்பினர்-செயலாளர் அதுகுறித்த அறிக்கையை தயாரிக்க வேண்டும்.



நிலத்தின் பரப்பளவைப் பொறுத்து ஒப்புதல் முறை அமல்படுத்தப்பட உள்ளது. 10,000 ச.மீட்டருக்குள் உள்ள நிலங்கள் நகர வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, 5 வேலை நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். கட்டணம் செலுத்தியவுடன் சான்றிதழ் வழங்கப்படும். 10,000 ச.மீட்டருக்கு மேல் உள்ள நிலங்கள் எனில் வாரியத்தின் பரிந்துரைக்குப்பின், அரசின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் முடிவு 5 வேலை நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும்.



ஆட்டோ அப்டேட்: நிலப்பயன்பாட்டு மாற்றம் அங்கீகரிக்கப்பட்டவுடன், அது புவியியல் தகவல் அமைப்பு சார்ந்த மாஸ்டர் பிளானில் உடனடியாகப் புதுப்பிக்கப்படும். இந்த தகவல் வருவாய்த்துறைக்கு தானியங்கி முறையில் அனுப்பப்பட்டு, வழிகாட்டி மதிப்பு பதிவேட்டிலும் உடனே மாற்றியமைக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாநில அரசிதழில் அதிகாரப்பூர்வமாக தொகுத்து வெளியிடப்படும். இது புதுச்சேரியின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது வரவேற்கத்தக்க நகர்வு என தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

Advertisement