திமுக ஆட்சியில் முக்கிய துறைகளில் 'டெண்டர்' முறைகேடு; ஆய்வு செய்ய ரகசிய குழுக்கள் அமைப்பு

23

- நமது நிருபர் -

தி.மு.க., ஆட்சியில், முக்கிய துறைகளில் நடந்துள்ள, 'டெண்டர்' முறைகேடு குறித்து ஆய்வு செய்ய, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய, ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், நகராட்சி நிர்வாகம், வருவாய், மக்கள் நல்வாழ்வு, தொழில், ஊரக வளர்ச்சி, நீர்வளம், வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம், கூட்டுறவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட 41 துறைகள் உள்ளன.

கமிஷன் கைமாறியது




இவற்றில் முக்கிய துறைகளுக்கு, ஆண்டுதோறும் பட்ஜெட்டில், 20,000 முதல் 40,000 கோடி ரூபாய் வரை, ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதியில், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மானியங்கள் வழங்குவது, கட்டமைப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இப்பணிகள் அனைத்தும், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, தகுதி அடிப்படையில் ஒன்று முதல் ஐந்து தரத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, லட்சங்களில் துவங்கி பல கோடி ரூபாய் வரையிலான பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்கின்றனர்.

தி.மு.க., ஆட்சியில், பல துறைகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள், தங்கள் பினாமிகளை ஒப்பந்ததாரர்களாக நியமித்து பணிகளை மேற்கொண்டனர். சில அமைச்சர்கள், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பணிகளை வழங்கி, அதற்கான கமிஷனை கறாராக பெற்றுக் கொண்டனர்.

பணிகள் தொடங்கும் முன்பே, முன்பணமாக கமிஷனை பெற்று, பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு துறையில் உள்ள அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர்.

ஒவ்வொரு பணிக்கும், 20 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் கைமாறியது. த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முக்கிய துறைகளில் நடக்கும், கமிஷன் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளார்.

ஆலோசனை




இது தொடர்பாக, துறையில் உள்ள அமைச்சர்களுக்கும், செயலர்களுக்கும், பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். 'டெண்டர்' விவகாரங்களில் அமைச்சர்களின் தலையீடு இருக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சட்டசபை கூட்டம் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கும், அரசுக்கும் பதிலடி தரும் வகையில், பல்வேறு புள்ளி விபரங்களை சேகரிக்க, முதல்வர் உத்தர விட்டுள்ளார். அதன்படி, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறைகளில் நடந்த, 'டெண்டர்' முறைகேடுகள் குறித்து விசாரிக்க ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து, இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. துறையின் செயலர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில், இக்குழுவினருடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.

'டெண்டர்' முறைகேடுகள் குறித்து, பல்வேறு தகவல்களை, இக்குழுவினர் திரட்ட தொடங்கி உள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கைகள், அந்தந்த துறை செயலர்கள் வாயிலாக, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Advertisement