மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் பணிச்சுமையால் அவதி:15 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இன்றி சிரமம்

மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உள்பட 65 போக்குவரத்து போலீசார் பணி செய்கின்றனர். அவர்கள் நகரில் உள்ள போக்குவரத்தை சீர் செய்வது, வாகன சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்ப்பது, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வசூலிப்பது உள்ளிட்ட பணிகள் செய்கின்றனர்.

1980 முதல் 1990 காலக்கட்டத்தில் மாவட்ட வளர்ச்சி அடைப்படையில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். சில ஆண்டுகள் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக தற்போதைய நகர விரிவாக்கம், போக்குவரத்து நெருக்கடிக்கு இணையாக போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படவில்லை. இதனால் குறைந்தளவு போலீசாரை கொண்டு போக்குவரத்து சீர் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளை காட்டிலும் தேனியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல், விதிமீறல்கள் அதிகரிக்கின்றன. தற்போது 15 போக்குவரத்து போலீசார் மட்டும் பணி செய்கின்றனர். மாவட்டம் உருவாக்கப்பட்டது முதல் இதே எண்ணிக்கையில் தான் போக்குவரத்து போலீசார் உள்ளனர். இவர்களில் சிலர் வார விடுப்பு, அவசர விடுப்பு எடுப்பதால் அந்நாட்களில் பணியில் உள்ள போலீசாருக்கு பணிச்சுமை கூடுகிறது.

முக்கிய பிரபலங்கள் வருகை தரும் நாட்களில் போக்குவரத்தை சீர் செய்ய போதிய போலீசார் இல்லை. இதனால் ஏட்டுக்கள் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர போக்குவரத்து போலீசாருக்கு, சட்டம்-ஒழுங்கு பணிகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டம், போராட்டம், திருவிழா காலங்களில் சட்டம், ஒழுங்கு போலீசாருடன் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்படுகின்றனர். பிற போக்குவரத்து ஸ்டேஷன்களில் போலீசார் குறைவாக உள்ளனர். அனைத்து ஸ்டேஷன்களிலும் 10 முதல் 15 போலீசார் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

கூடுதல் போலீசார் தேவை இதுபற்றி தேனி போலீசார் கூறியதாவது: தேனி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் 15 போலீசார் சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்துக்கு போலீசார் ஒதுக்கப்பட்டனர். அதன்பின் இன்று வரை புதிதாக நியமிக்கப்படவில்லை. இன்றைய தேனி நகரின் போக்குவரத்து கட்டமைப்பு படி குறைந்தது 30 போக்குவரத்து போலீசார் இருக்க வேண்டும். ஆனால் 15 போலீசாரை வைத்து எஸ்.பி., போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்கிறார். கூடுதல் போக்குவரத்து போலீசார் தேவை என பல முறை கோரிக்கை வைத்தும் போலீஸ் எஸ்.பி., தமிழக போலீஸ் துறைக்கு பரிந்துரைக்க மறுக்கிறார். 2026 தேர்தல் நேரத்தில் மதுரை, திண்டுக்கலில் இருந்து போக்குவரத்து போலீசார் தேனிக்கு மாற்றப்பட்டனர். அவர்களும் தற்போது மீண்டும் பழைய பணியிடங்களுக்கு திரும்பி விட்டனர் என்றார்.

Advertisement