திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்த நியமன முறைகேடு புகார்

சென்னை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவு துறை விதிகளை மீறி தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் சங்கங்கள், பல்பொருள் அங்காடி, பெட்ரோல் பங்க், காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நடத்துகின்றன. இவற்றில், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து, கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களிடம் இருந்து, வேலையாட்களை நியமனம் செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாகவே ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்படி, 2020ல் கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, பல சங்கங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

திருவல்லிக்கேணி சங்கத்தில் மட்டும், 130 - 150 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளத்தை சங்கமே தருகிறது. தற்போது, தனியார் நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு, 'ஆதாயமே' காரணம். இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement